கள்ளச்சாராய விவகாரம் : தமிழக அரசை கண்டித்து திருச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தினால் 50 க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விஷச்சாராயம் விற்றவர்களை கைது செய்ய வேண்டும். காவல்துறை, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரின் மெத்தனப் போக்கை ஓய்வு பெற்ற நீதிபதி கொண்டு விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டும். கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து விவசாயிகள் திரளாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்நிகழ்வில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.