திருச்சியில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.6 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்!
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.



இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பாபு என்ற நபரின் சரக்கு வாகனத்தில் ரூபாய் 1 லட்சத்து 92 ஆயிரத்து 160 ரூபாய் ரொக்கம் இருந்தது தெரிய வந்தது. ஆனால் அதற்குரிய முறையான ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து திருச்சி மேற்கு தொகுதி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.



அதே போல திருச்சி ஓயாமரி சஞ்சீவி நகர் பகுதியில் பறக்கும் படை தலைமை அலுவலர் முத்து கருப்பன் தலைமையில் நடைபெற்ற சோதனையில், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த குலஞ்சியப்பன் என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர். மேலும் இன்று ஒரே நாளில் திருச்சியில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 6,02,160 ரூபாயை திருச்சி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.





