ரயில்களை பராமரிப்பதில் ரயில்வே துறை அலட்சியம் காட்டுவதாகவும், தமிழ்நாட்டில் ஓடும் ஏராளமான ரயில்களில் ஓட்டை பெட்டிகள்தான் இணைக்கப்படுகின்றன எனவும், கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் பராமரிப்பில் தொடர்ந்து அலட்சிய போக்கையே ரயில்வேதுறை காட்டுகிறது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சமீபத்தில் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் எஸ்.ஆர்.எம்.யூ தொழில் சங்கத்தின் துணை பொதுச் செயலாளர் வீரசேகரன், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…
ரயில்வே தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி பி.என்.எம் கூட்டம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இதில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை நாங்கள் அவ்வப்போது கோரிக்கையாக வைத்து சரி செய்து வருகிறோம்.
சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழகத்தில் ஓடும் ரயில் பெட்டிகளை சரிவர பராமரிப்பது இல்லை, கட்டணம் மட்டும் பெற்றுக்கொண்டு ரயில்வே நிர்வாகம் இவ்வாறு செய்கிறது என்ற கண்டனத்தை பதிவு செய்தார்கள்.
இதற்கு முக்கிய காரணம் தனியார் மயம் தான். ரயில்வே தொழிலாளர்களை வைத்து பராமரிப்பு செய்து வந்த நிலையில் நல்ல முறையில் தூய்மையாக ரயில் பெட்டிகள் அனைத்தும் இருந்தது. தற்போது அதிகமாக தனியார் மயம் காரணமாக இது போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் தனியார் மயத்தில் பலருக்கு குறைந்த சம்பளம் கிடைத்தாலும் வேலை உத்தரவாதம் கிடைப்பதில்லை. பயணிகள் பாதுகாப்பாக பயணிக்கத் தான் நாங்கள் தனியார் மயத்தை எதிர்க்கின்றோம். பல்வேறு தனியார் மற்றும் ஒப்பந்ததாரர்கள் முறையாக பணியாற்றுவதில்லை.
ரயில்வே தொழிலாளர்கள் மட்டுமே முறையாக பணியாற்றுவார்கள். திருச்சி கோட்டத்தை பொருத்தவரை ரயில் அலுவலர்கள் கண்காணிப்பு செய்து வருகின்றனர். அப்படி இருந்தும் இதுபோன்ற நிலைமையை வன்மையாக கண்டிக்கிறோம்.
தனியார் மயத்தை கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுக்க உள்ளோம். திருச்சி பொன்மலை பணிமனையில் வருடத்திற்கு 1250 ரயில் கோச் பழுதுபார்க்கப்படுகிறது. திருச்சியில் 140 ரயில்கள் இரவு பகலாக ஓடுகின்றன. கிட்டத்தட்ட 140 பெட்டிகள், 11 விரைவு வண்டி மற்றும் 10 பேசஞ்சர் வண்டிகளை தூய்மை செய்து அனுப்பி வருகிறோம் என தெரிவித்தார்.