பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் விதமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜனவரி 2 ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திருச்சி வருகை தர உள்ளார். அன்றைய தினம் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிய முனையம் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார். பின்னா் பகல் 1.15 மணியளவில் லட்சத்தீவுக்குப் புறப்பட்டுச் செல்கிறாா்.

இந்நிலையில் திருச்சிக்கு பிரதமா் மோடி, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், ஆளுநா் ஆா்.என். ரவி உள்ளிட்டோா் வருகை தரவுள்ளதால், திருச்சியில் ‘டிரோன்கள்’ பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் பிரதமா், முதல்வா் வருகையையொட்டி திருச்சி மாவட்டத்தில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க டிசம்பா் 28 முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

