துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கிராமம், கிராமமாக சென்று பாரி வேந்தர் பிரச்சாரம்!
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இவர் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கிராமம், கிராமமாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் நேற்று துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது வேட்பாளர் பாரிவேந்தர் பேசுகையில்….
2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட எனக்கு வாக்குகளை அள்ளி தந்தீர்கள். அதே போல வருகிற தேர்தலிலும் என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.
அரியலூர் – பெரம்பலூர் – துறையூர் – நாமக்கல் நகரங்களை இணைக்கும் ரெயில்வே திட்டங்களை கொண்டுவர முயற்சி செய்தேன். இந்த முறை அந்த திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும். நான் சொன்னதை செய்து விட்டு உங்கள் முன் நிற்கிறேன்.
1200 மாணவர்களுக்கு உயர் கல்வி தருவேன் என்று கூறினேன். அதனை நிறைவேற்றியுள்ளேன். மீண்டும் இத்திட்டம் தொடரும். இந்த தேர்தலில் மீண்டும் ஒரு வாக்குறுதி தருகிறேன்.
1500 ஏழை குடும்பங்களுக்கு உயர் மருத்துவம் வழங்கப்படும். பிரதமர் மோடி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளார். அவரை எதிர்த்து நிற்க ஒருவரும் இல்லை.
தமிழ்நாட்டில் இருந்து சென்ற எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்குவது. அதனை நடத்த விடாமல் தடுப்பது உள்ளிட்ட வேலைகளை தான் செய்துள்ளனர். ஊழல் செய்யும் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம். ஊழல் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.
பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த, ஊக்கப்படுத்த எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று தெரிவித்தார். இந்த பிரச்சாரத்தின் போது ஐ.ஜே.கே நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.