தேர்தல் மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. மற்ற மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் போதிலும், தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இதனிடையே, தேர்தலில் வாக்களிப்பதற்காக அன்றைக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, தேர்தலில் வாக்களிப்பதற்காக மக்கள் சொந்த ஊர் செல்ல தாயராகி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், கோடை விடுமுறை என்பதாலும் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.

இதனால் தேர்தல் தேதியான ஏப்ரல் 19-ம் தேதிக்கு முந்தைய தினங்களில் லட்சக்கணக்கானோர் சொந்த ஊர் செல்வார்கள். இந்நிலையில், இவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் மொத்தமாக 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதில் ஏப்ரல் 17, 18 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து 2,970 பேருந்துகள் என மொத்தம் 7,154 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 3,060 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேபோல, ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவுக்கு பிறகு ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 1825 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 6,009 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிற ஊர்களில் இருந்து வேறு ஊர்களுக்கு செல்ல 2,297 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இவ்வாறு மொத்தம் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து திருச்சி, மதுரை, கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், காரைக்குடி, புதுக்கோட்டை, கோவை, சேலம், திருப்பூர் என பல்வேறு மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.




