திருச்சியில் லாட்டரி வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது – காவல் ஆணையர் அதிரடி!
திருச்சி மாநகர் உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலைரோடு பகுதியில் கடந்த 13 ஆம் தேதி தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காண்பித்து சட்டை பையில் இருந்த பணத்தை வழிப்பறி செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் பனிக்கத்தெருவை சேர்ந்த வேல்முருகன் (எ) முருகன் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில் வேல்முருகன் (எ) முருகன் மீது உறையூர் காவல் நிலையத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை செய்ததாக 13 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. எனவே இவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு உறையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி வேல்முருகனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க ஆணையிட்டார்.
அதனை தொடர்ந்து, வேல்முருகன் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சி மாநகரில் அபாயகரமான ஆயுதத்தை காண்பித்து வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.