லால்குடி எம்எல்ஏ விவகாரம் – சமாதானம் பேசியதாக கூறும் அமைச்சர் கே.என்.நேரு!

0

திமுக முதன்மை செயலாளரும் நகர்புற நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவராலேயே தான் செயல்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் அதனால் தனக்கு எம்.எல்.ஏ பதவியே வேண்டாம் என்று கூறி 10 பக்கங்களுக்கு குறையாமல் எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியன் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி  கடிதம் எழுதியது திருச்சியில் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்று கேன்.என்.நேரு தரப்பே ஆர்டர் போடுவதாகவும், டெண்டர் உள்ளிட்ட விவகாரங்களில் அமைச்சர் நேருவின் உறவினர்கள் தலையிட்டு எம்.எல்.ஏக்களுக்கு குடைச்சல் கொடுப்பதாவும் கூறி துறையூர், முசிறி, லால்குடி, மண்ணாச்சநல்லூர், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் திருச்சி அரசியலில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், வெளிப்படையாக அதனை யாருமே இதுவரை காட்டிக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தொகுதியின் எம்எல்ஏ சௌந்தர பாண்டியனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக லால்குடி பகுதியில் எந்த திட்டங்களை தொடங்கினாலும், அதற்கு முறையான அழைப்பு எம்எல்ஏ சௌந்தர பாண்டியனுக்கு கொடுக்கவில்லை.
அரசு அதிகாரிகளோ அல்லது அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் அனைவரும் எம்.எல்.ஏ வை ,  ஓரங்கட்டுவதற்காக அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் அமைச்சர் நேருவால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த எம்எல்ஏ சௌந்தர பாண்டியன், சமூக வலைதளத்தில் தான் இறந்து விட்டதாக தானே பதிவிட்டிருந்தார். இது திருச்சியில் திமுகவினர் மற்றும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு , லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியனை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு சமூக வலைதளத்தில் பதிவிட்ட தனது கருத்தினை சௌந்தரபாண்டியன் நீக்கிவிட்டார்.

- Advertisement -

இந்நிலையில் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் இன்று நடைபெற்ற தனியார் மருத்துவமனை புதிய கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில்….

கேள்வி : லால்குடி எம்எல்ஏ சௌவுந்தர பாண்டியன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்துக்கு உங்களுடைய பதில் என்ன??

லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் அவர்களை நேரில் அழைத்து பேசி விட்டேன்.

கேள்வி : ஏற்கனவே சௌந்தரபாண்டியன் ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு கொடுத்துள்ளார் ? ..

தம்பி போப்பா… போப்பா என்று கோபமாக பதிலை தெரிவித்துவிட்டு கார் வேகமாக எடுத்துச் சென்றார்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்