காமராஜர் மக்கள் கட்சி தமாகாவுடன் இணைப்பு -தமிழருவி மணியன்
காமராஜர் மக்கள் கட்சி தமாகாவுடன் இணைப்பு -தமிழருவி மணியன்

காந்திய மக்கள் இயக்கம் தலைவராக இருந்த தமிழருவி மணியன் பின்னாளில் தனது இயக்கத்தை காமராஜர் மக்கள் கட்சி என மாற்றம் செய்து அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தமிழருவி மணியன் நடத்தி வந்த காமராஜர் மக்கள் கட்சியை ஜிகே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துள்ளார். தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படும் சூழலில், தொண்டர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.தமிழக அரசியலில் ஒரு கட்சியுடன் இன்னொருக் கட்சியை இணைக்கும் நிகழ்வை அரிதாகவே பார்க்க முடியும். அப்படி கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடிகர் சரத்குமார் நடத்தி வந்த சமத்துவ மக்கள் கட்சியை திடீரென பாஜகவுடன் இணைத்தார். தற்போது சட்டசபைத் தேர்தலுக்கு 4 மாதங்களுக்கு முன்பாக தமிழருவி மணியன் நடத்தி வந்த காமராஜர் மக்கள் கட்சியை தமாகாவுடன் இணைத்திருக்கிறார்.இதுதொடர்பாக தமிழருவி மணியன் பேசுகையில், டிசம்பர் 20ஆம் தேதியே காமராஜர் மக்கள் கட்சியை தமாகாவுடன் இணைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டோம். அரசியலில் பணமே பிரதானம். எனது கட்சியை நடத்த மாதம் ரூ.60 ஆயிரம் தேவைப்படுகிறது. அதனை ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களிடம் பெற்று நடத்தி வந்தேன். இனி பணம் பெற மனம் இல்லாததால், இந்த முடிவு எடுத்துள்ளேன். 55 ஆண்டுகளாக அரசியலில் பயணித்து வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றாலும் ஊழல் கறைபடியாத கரங்கள் கொண்ட தமாகா தலைவர் ஜிகே வாசனிடம் கட்சியை ஒப்படைத்து கொண்டு அரசியலில் இருந்து விலகுகிறேன்.அதேபோல் தமிழக அரசியலில் நடிகர் ரஜினிகாந்த் பிரவேசிக்காதது வரலாற்று பிழை. ஊழலற்ற ஆட்சியை வழங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தவர்.ஆனால் ரஜினிகாந்த் அவருக்கான வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். தற்போது அரசியலுக்கு வந்துள்ள விஜய் மக்கள் சேவைக்காக கட்சி தொடங்கியவர் அல்ல. தனலாபம் ஈட்ட வேண்டிய கட்சியை தொடங்கி இருக்கிறார். அதற்கு லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனாவே ஒரு எடுத்துக்காட்டு. வரும் சட்டசபைத் தேர்தலில் ஜிகே வாசன் வாய்ப்பு அளித்தால் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த், அண்ணாமலை உள்ளிட்டோருக்கு ஆதரவாக இருந்த தமிழருவி மணியன், திடீரென கட்சியை தமாகாவில் இணைத்திருப்பது தமிழக அரசியலின் மிகப்பெரிய நிகழ்வாக மாறி இருக்கிறது. இதனால் தமிழருவி மணியனின் அடுத்தக்கட்ட திட்டம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.





Comments are closed.