திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உள்ளிட்ட 3 மணிமண்டபங்கள் அருகே உள்ள மதுபான கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் – செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேட்டி
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கடந்த ஆண்டு 3 மணிமண்டபங்கள் திறக்கப்பட்டன. பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணி மண்டபம், நீதி கட்சியின் வைரத்தூண் சர் ஏ.டி.பன்னீர்செல்வம் மணிமண்டபம், எம்.கே.தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் ஆகியவை இங்கு அமைந்துள்ளன. இதனை
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், தியாகராஜ பாகவதர் ஆகியோரின் சிலைகளுக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சாமிநாதன் கூறும்போது..,
பணிகள் முடிந்து நீண்ட நாட்களாக திறக்காமல் இருந்த மணி மண்டபங்களை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். அவற்றை மேலும் எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மணிமண்டபம் அருகே இருக்கக்கூடிய மதுபான கடை மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்கு பின்னர் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தால் அந்த கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை திறப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும். பி.ஆர்.ஓ காலி பணியிடங்கள் குறித்து தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதற்குரிய அதிகாரிகள் கொண்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்த ஆய்வின் போது திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Comments are closed.