திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுயேச்சை வேட்பாளர் தாமோதரன் அனல் பறக்கும் பிரச்சாரம்!
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல்களம் தற்போது சூடு பிடித்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ தாமோதரன் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு தொகுதிகளிலும் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில் இன்று திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சர்க்கார் பாளையம், முல்லைகுடி, ஒட்டக்குடி, நடராஜபுரம், கிளியூர், பத்தாளபேட்டை, துவாக்குடி, பிஹெச்எல், கூத்தைப்பார், மலைக்கோவில், காட்டூர், எஸ் ஐ டி, பணையகுறிச்சி, அரியமங்கலம், சூரியூர், நவல்பட்டு, பாப்பாகுறிச்சி, கீழக்குறிச்சி, குண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் சென்றவாறு பொதுமக்களிடம் கேஸ் ஸ்டவ் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்பொழுது பொதுமக்கள் தங்களின் முழு ஆதரவு உங்களுக்கு உண்டு நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வேட்பாளர் தாமோதரன் பொதுமக்களிடம் பேசுகையில்…
திருச்சியில் போக்குவரத்து பிரச்சனையை சரி செய்ய அரை வட்டச் சாலை அமைக்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாராளுமன்றத்தில் பொது மக்களின் குரலாய் ஒலிப்பேன். நீங்கள் என்னை வெற்றி பெறச் செய்தால் இந்தியாவிலேயே முதன்மை தொகுதியாக திருச்சியை மாற்றிக் காட்டுவேன் என தெரிவித்தார்.