மக்களின் தேவைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் – ஶ்ரீரங்கம் பகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா பிரச்சாரம்!
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையா தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு செல்லும் இடமெல்லாம் பொது மக்கள் ஆரத்தி எடுத்து மலர் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிளிக்கூடு, பணையபுரம், உத்தமர்சீலி, திருவானைக்காவல், கொள்ளிடம் செக் போஸ்ட் ஆகிய பகுதிகளில் நேற்று வேட்பாளர் கருப்பையா திறந்த வெளி வாகனத்தில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில்….
ஜெயலலிதா ஶ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்று இந்த தொகுதியை வளர்ச்சி பெற்ற தொகுதியாக மாற்றினார். 30 ஆண்டுகளில் அடைய வேண்டிய வளர்ச்சியை ஒரு சில ஆண்டுகளில் நிகழ்த்திக் காட்டினார்.
3 ஆயிரம் கோடிக்கு மேலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தி தொகுதியை உன்னத நிலைக்கு கொண்டு சென்றார். அவரது வழியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் உங்களுக்கு பணியாற்ற அதிமுக சார்பில் ஶ்ரீரங்கம் தொகுதியை உள்ளடக்கிய திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தற்போது நான் போட்டியிடுகின்றேன்.
ஜெயலலிதா வென்ற தொகுதியில் நின்று கேட்கிறேன் இப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து உங்களுக்காக ஓடோடி வந்து செய்து முடிப்பேன்.
உங்களின் எந்த தேவையாக இருந்தாலும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் உங்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். உங்கள் வீட்டு பிள்ளையாக சேவையாற்ற எனக்கு இரட்டை இலையில் வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.