சொந்த செலவில் முத்தரையர் வெண்கல சிலை அமைத்து தருவேன் – லால்குடி பகுதியில் பிரச்சாரத்தின் போது பாரி வேந்தர் வாக்குறுதி!
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரி வேந்தர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவர் தாமரை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் லால்குடி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கூகூர் பகுதியில் வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, முத்தரையர் சிலையை வெண்கல சிலையாக தர வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று வேட்பாளர் பாரிவேந்தர், சொந்த நிதியில் முத்தரையர் வெண்கல சிலையை அமைத்துத் தருவேன் என வாக்குறுதி அளித்தார்.



தொடர்ந்து தாளக்குடி, வாளாடி, நெருஞ்சலக்குடி, மாந்துறை, பம்பரம்சுற்றி, திருமணமேடு, கூகூர், அன்பில், திண்ணியம், சிறுமயங்குடி, காட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து அன்பில் கிராமத்தில் உள்ள அன்பில் தர்மலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின் போது வேட்பாளர் பாரி வேந்தர் பேசுகையில் …..
பெரும்பாலான எம்.பிக்கள் தொகுதி நிதியை முழுமையாக பயன்படுத்துவதில்லை, ஆனால் நான் முழுமையாக தொகுதியை நிதியை பயன்படுத்தி உள்ளேன். கொரோனா நோய் தொற்று காரணத்தால் 2 ஆண்டுகள் நிதி இல்லாமல் போனது இருந்தும், எனது சொந்த நிதியில் இருந்து கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வந்தேன்.
எனது நிதியில் பெரும்பாலும் மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு அரசு பள்ளிகளுக்கான வகுப்பறை கட்டிடம், குடிநீர், கழிப்பிட கட்டிடம் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு நியாய விலை கடை கட்டிடம், சமுதாயக் கூடம் உள்ளிட்ட தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளேன்.
மேலும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் 1500 குடும்பங்களுக்கு எனது சொந்த நிதியில் இலவச அவசர மேல் சிகிச்சை செய்து கொடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளேன். மேலும் தற்போது இந்த பகுதியில் வைத்துள்ள
கோரிக்கையை மீண்டும் வெற்றி பெற்று நிறைவேற்றுவேன் என உறுதி அளித்தார்.




