28% உள்ள ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக அரசு குறைக்க வேண்டும் – இரு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை!
திருச்சி மண்டல இரு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் தொழிற்சங்கம் மற்றும் தமிழ்நாடு இருசக்கர வாகனப் பழுது நீக்குவோர் தலைமை நல சங்கம் இணைந்து நடத்திய 22 வது ஆண்டு பொதுக்குழு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி சுப்ரமணியபுரம் சங்கீத் மஹாலில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில செயலாளர் சசிகுமார், மாநில பொருளாளர் ஜமால் முகமது, திருச்சி மண்டல இணைச் செயலாளர் அடைக்கலம் உள்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாநில தலைவர் செல்வம் மற்றும் மாநில செயலாளர் சசிகுமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்…
ஜி.எஸ்.டி கவுன்சிலிங் கூடும்போது ஆட்டோ மொபைலினுடைய ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் உள்ளதை, பொதுமக்களை பாதிக்காத அளவிற்கு அதனை 18 சதவீதமாக வரி விலக்கு அளிக்க வேண்டும். தொழிலாளர் நிறுவனங்கள் வழங்கக்கூடிய சலுகைகள் எங்களுக்கு தடையாக இருக்கக்கூடிய லாட்டரி தடை சட்டத்திற்கு தமிழக அரசு எங்களுக்கு விலக்கு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தொழிலாளர்களுக்கு உரிய திட்டங்களை மாநில அரசு தர வேண்டும். மத்திய அரசு வழங்கக்கூடிய பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தொழிலாளருக்கு முறையாக சேர்வதில்லை அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.