தொழில்முனைவோர் பயிற்சிக்கான பட்டய படிப்பு – திருச்சி மாவட்ட ஆட்சியர் அழைப்பு!
தமிழ்நாடு அரசு, அகமதாபாத்தில் இயங்கி வரும் இ.டி.ஐ.ஐ., என்ற நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு தொழில் முனைவோர் பயிற்சிக்கான பட்டய படிப்பு வழங்க உள்ளது. இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது…..
சென்னை இ.டி.ஐ.ஐ தலைமையகத்தில் ஆண்டுக்கு 500 பேருக்கு பயிற்சி வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூபாய் ஒரு லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டய படிப்புக்கான பாடத்திட்டம், மாணவர் சேர்க்கை விதிமுறைகள், மாணவர்கள் தேர்ச்சி குறித்து அந்நிறுவனமே முடிவு செய்யும். ஆங்கில மொழியில் பயிற்சி இருக்கும் என்பதால், ஆங்கில புலமை இல்லாதோருக்கு சிறப்பு பயிற்சியும் வழங்கப்படும்.

21 முதல் 30 வயதுக்குட்பட்ட இளநிலை பட்டதாரிகள் சேரலாம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு உள் ஒதுக்கீடு செய்யப்படும். நுாறு சதவீதம் கல்வி உதவித் தொகை பெற வழி உள்ளது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பங்கு பெறலாம். இதுகுறித்த கூட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (22.05.2024) அன்று மாலை 04:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

கூடுதல் தலைமை செயலாளர் உமாசங்கர் இப்பயிற்சி குறித்து உரையாற்றவுள்ளார்கள். இக்கூட்டத்தில் உயர்கல்வி நிறுவன பிரதிநிதிகள், குறு, சிறு தொழில் சங்கங்கள் உட்பட பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். தொழில் ஆர்வலர்கள் இதில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




