திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக நாடு முழுவதும் சர்ச்சை எழுந்து வரும் நிலையில், திரைப்பட இயக்குனரான மோகன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் மருந்துகளும், கருக்கலைப்பு மாத்திரைகளும் கலக்கப்படுவதாகவும், இது இந்துக்களுக்கு எதிராக நடக்கும் செயல் எனவும் பேசியிருந்தார்.
இது தொடர்பாக பழனி முருகன் கோயில் நிர்வாகம் சார்பாக பழனி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி சமயபுரம் கோவிலில் இந்து அறநிலையத்துறையில் மேலாளராக பணிபுரியும் கவிராஜன் என்பவர் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த திருச்சி மாவட்ட போலீசார் திரௌபதி மற்றும் பாகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மோகனை இன்று காலை சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அவர் வீட்டில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை திருச்சி அழைத்து வந்து, திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஜே.எம் 3 நீதிபதி பாலாஜி முன்பு ஆஜர்படுத்தினர்.
அப்பொழுது வழக்கை விசாரணை செய்த நீதிபதி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மோகன் பேசிய சொற்கள் தவறாக இருந்தாலும், காவல்துறையினர் அவரை கைது செய்வதற்கான உரிய காரணங்களை தெரிவிக்காததால் இந்த வழக்கில் இருந்து அவரை சொந்த பிணையில் விடுவிப்பதாக உத்தரவிட்டார். மேலும் முறையான சட்ட முறைகள் கைதின் போது பின்பற்றப்படவில்லை. புகார் குறித்து வழக்குப்பதிவு செய்தது சரியே, ஆனால் கைது சட்டவிரோதம் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
Comments are closed.