100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருச்சியில் ஹீலியம் பலன்களை பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவிகள்!
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையினை ஆற்றிட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமாரின் அறிவுறுத்தலின்படி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம், விழிப்புணர்வு பேரணி, ரங்கோலி கோலம் வரைதல், வாகனங்கள் மற்றும் குடிநீர் கேன்களில் விழிப்புணர்வு ஓட்டுவில்லைகளை ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் 5000 மாணவியர்கள் கலந்து கொண்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஹீலியம் பலூன்களை வானில் பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில், துணை ஆட்சியர் வேலுமணி, முதன்மை கல்வி அலுவலர் திருமதி கிருஷ்ணப்பிரியா, மாநகராட்சி உதவி ஆணையர் (ஸ்ரீரங்கம்) ஜெயபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.