திருச்சி அருகே தொடரும் தலித் கிறிஸ்தவர்களின் சாதிய தீண்டாமை – உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி தேர்த்திருவிழாவை நடத்த பொது மக்கள் கோரிக்கை!

0

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், புறத்தாக்குடி – மகிழம்பாடி கிராமங்களில் வசிக்கும் தலித் கிறிஸ்தவ மக்கள், திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில் ஸ்டீபன் தாஸ் என்பவர் கூறுகையில்…

- Advertisement -

திருச்சி மாவட்டம்
புறத்தாக்குடி – மகிழம்பாடி கிராமத்தில் உள்ளது புனித சவேரியார் பங்கு ஆலயம் (கும்பகோணம் கத்தோலிக்க மறை மாவட்டத்திற்கு உட்பட்டது.) இந்த பங்கு ஆலயத்தில் நடைபெறும் அனைத்து சாதிய தீண்டாமை, பாகுபாட்டை கடைப்பிடிக்கும் கும்பகோணம் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர், மற்றும் புறத்தாக்குடி – மகிழம்பாடி பங்கு தந்தையை வன்மையாக கண்டிக்கிறோம். கிட்டத்தட்ட 350 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள புனித சேவியர் பங்கு ஆலயத்தில், பங்கு திருவிழாவில் கத்தோலிக்க ( தலித் கிறிஸ்துவ பள்ளர், கிறிஸ்துவ பறையர் ), கிறிஸ்தவர்களிடம் வரி வசூல் செய்யாமல் புறக்கணித்து வருகிறார். பங்கு ஆலயத்தில் தலித் கிருத்துவர்கள் பங்கு பேரவையில் வந்து விடுவார்கள் என்பதற்காக பங்கு பேரவை அமைக்கப்படாமல் உள்ளது. மேலும் பங்கு திருவிழா காலங்களில் தலித் கிறிஸ்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் கொடி ஊர்வலம், குருத்தோலை பவனி, மெழுகுவர்த்தி பவனி வர மறுக்கின்றனர். அதேபோல் திருவிழாவின்போது சப்பரத்தினை ( சிறிய தேர்) தொடுவதற்கு கூட தலித் கிறிஸ்தவர்களை அனுமதிப்பதில்லை. மேலும் திருவிழாவின்போது தீண்டாமையின் உச்சமாக சப்பரத்தில் மற்றும் பெரிய தேரில் வைக்கப்படும் சாமி சுருவத்தினை தொடுவதற்கும், தூக்குவதற்கும் மற்றும் சுருவத்தின் மீது மாலை போடவும் அனுமதிப்பதில்லை. குறிப்பாக தேரின் மீது வைக்கப்படும் கலசத்தை இன்று வரை தூக்குவதற்கும், தொடுவதற்கும் தலித் கிறிஸ்தவர்களுக்கு அனுமதி இல்லை. தொடர்ந்து இந்த ஆலயத்தில் நடைபெறும் பாஸ்கா மத கலாச்சார திருவிழாவின் போது தீண்டாமை அடிப்படையில் நடக்க விடாமல் தலித் கிறிஸ்துவர்கள் புறக்கணிக்கப் படுகின்றனர். இந்த கிராமங்களில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறது. அதில் மேலாதிக்கம், கீழ் ஆதிக்கம் என சாதிய வேறுபாடு தலை தூக்கி உள்ளது. தொடர்ந்து தலித் மக்களையும் தலித் கிறிஸ்துவ மக்களையும் அவமதிப்பது, புறக்கணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் மதுரை நீதிமன்ற கிளை சாதிய தீண்டாமை பாகுபாடு இல்லாத வகையில் தேர்த்திருவிழாவை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும் மறைமாவட்ட ஆயர் திருவிழாவை நடத்தாமல் தள்ளிப்போட்டு வருகிறார். ஆகவே நீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து தேர்த்திருவிழாவை நடத்த வேண்டும். குறிப்பாக வருகின்ற நாட்களில் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களில் தலித் கிறிஸ்தவர்களை முழுமையாக அனுமதித்து அனைத்து சலுகைகளையும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து பயன்படுத்த வேண்டும், செயல்படுத்த வேண்டும் என்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது பிரிட்டோ, ஜோஷ்வா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்