குவைத் தீ விபத்தில் உயிரிழந்த திருச்சியை சேர்ந்த ராஜூவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
குவைத் தீ விபத்தில் சிக்கி இறந்த நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த டிரைவர் ராஜுவின் உடலுக்கு அரசு சார்பில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, ஏ.டி.எஸ்.பி குத்தாலிங்கம் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்தவர் எபினேஷன் – தனலட்சுமி தம்பதியரின் மகன் ராஜூ (53). இவர் குவைத் நாட்டில் உள்ள என்.பி.டி.சி நிறுவனத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கண்டெய்ணர் வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், குணசீலன், சம்பத்குமார் என்ற மகன்களும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.
அவருக்கு 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் பணி ஒப்பந்தம் நிறைவடைகிறது. இந்த நிலையில் அவர் குவைத் நாட்டில் தங்கியிருந்த விடுதியில் கடந்த 12 ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதில் திருசியியை சேர்ந்த ராஜூவும் உயிரிழந்தார். இந்த நிலையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் இறந்து போன தமிழர்களின் உடலை கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து இறந்து போனவர்களின் உடல் விமானத்தின் மூலம் கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்திற்கு நேற்று காலை 10.45 மணியளவில் வந்தடைந்தது. அங்கு சென்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான் தமிழர்களின் உடல்களை பெற்று ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு மதியம் 1.30 மணி அளவில் அனுப்பி வைத்தனர்.
அதன்படி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராஜு வின் உடல் நேற்று இரவு 10:22 மணி அளவில் அவரது வீட்டிற்கு வந்தடைந்தது.
ராஜுவின் உடலை பார்த்த அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் கதறி அழுதனர். தொடர்ந்து அரசு சார்பில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, ஏடிஎஸ்பி குத்தாலிங்கம் ஆகியோர் நேரில் சென்று ராஜுவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அப்பொழுது ராஜு விடுப்பு எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு வரலாம் என அடுத்த மாதம் 20 ஆம் தேதி வருவதற்கு விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்ததாகவும் அதற்குள் இப்படி விபத்தில் சிக்கி ராஜு இறந்து விட்டதாகவும் கூறி அவரது குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் காண்பவரின் கல்நெஞ்சையும் கரைய வைக்கும் விதமாக இருந்தது.