சோழிய வெள்ளாளர் சங்கத்தின் தலைவர் டாக்டர் செந்தில் பிள்ளை திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள கி.ஆ.பெ பள்ளியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில் அவர் கூறுகையில்…
வ.உ.சி அவர்களையும் சோழிய வெள்ளாளர் மக்களையும் இழிவுபடுத்தும் விதமாக ஆ.ராசா பேசியுள்ளது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற பேச்சுகளுக்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
தொடர்ந்து ஆ.ராசா இது போன்று பேசி வருகிறார். ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக முதல்வர் இது குறித்து நடவடிக்கை எடுப்பார் என நம்புகின்றோம். இதுகுறித்து ஆ ராசா மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலின் போது தமிழகம் முழுவதும் கருப்பு கோடி ஏந்தி திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வோம். அடுத்த கட்டமாக வருகின்ற 25ஆம் தேதி மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. வேளாளர்கள் மற்றும் வெள்ளாளர்கள் இணைந்து நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் எடுக்கப்படும் முடிவின்படி அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வோம்.
தமிழகத்தில் 154 உட்பிரிவுகளில் இரண்டு கோடிக்கும் அதிகமான வேளாளர்கள் மற்றும் வெள்ளாளர்கள் உள்ளனர். கடந்த கால தேர்தலில் முக்கிய வெற்றி வாய்ப்பை தரக்கூடிய இடத்தில் வெள்ளாளர் சமூகம் இருக்கின்றது. ஆ.ராசாவின் பேச்சுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை கண்டிப்பாக செய்வோம். தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம் என கூறினார்.