திருச்சி யானை மறுவாழ்வு முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த யானை உடல் நலக்குறைவால் உயிரிழப்பு!
திருச்சி சிறுகனூர் அருகே எம்.ஆர். பாளையம் பகுதியில் உள்ள யானைகள் மறு வாழ்வு முகாமில் கீரதி (வயது 65) என்ற பெண் யானை கடந்த 2 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானை தூத்துக்குடி பகுதியில் உரிமம் இல்லாமலும், எந்த வித அனுமதி இல்லாமலும் வளர்ப்பு யானை விதிகளுக்கு புறம்பாக நோய் வாய்ப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட யானைகள் பராமரிப்பு கமிட்டியின் பரிந்துரையின் பெயரில், திருச்சி எம்.ஆர். பாளையம் யானைகள் மறுவாழ்வு முகாமிற்கு கீரதி கொண்டு வரப்பட்டு, சிகிச்சை அளித்து பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட வன அலுவலரால், தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் வன கால்நடை மருத்துவர்கள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5.00 மணி அளவில் சிகிச்சை பலனின்றி யானை இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து நேற்றைய தினம் திருச்சி மாவட்ட வன அலுவலர் தலைமையில், வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் திருச்சி மண்டல நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் தலைமையிலான குழு, மற்றும் பணியாளர்கள், தன்னார்வலர்கள், முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்து யானை முகாம் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.