இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வு எழுதிய அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் – இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை!
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் நியமனத்தேர்வில் 25,606 பேர் தேர்வு எழுதிய நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2768 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அரசின் அறிவிப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், மன உளைச்சலையும் அளித்துள்ளது.
இதனிடையே, நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பு இன்று திருச்சி பிரஸ் & மீடியா கிளப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அதன் நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், அதன் தலைவர் பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்….
கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளை எழுதி, தற்போதைய நியமன தேர்வையும் எழுதி, 40 முதல் 50 வயதை கடந்துள்ள தங்கள் நிலைமையை கருத்தில் கொண்டு, முழுமையான காலி பணியிடங்களை அறிவித்து, அதற்கு நியமன தேர்வர்களை கொண்டு பணி நிரப்ப வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.
அதேநேரம் அரசு பள்ளிகளில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பணத்தைப் பெற்றுக்கொண்டு உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களை தற்காலிக முறையில் ஆசிரியர் பணிநிரவல் செய்வதால், 12 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகளில் சேர்ந்து பணியாற்றுவோம் என காத்திருக்கும் எங்களுக்கு மேலும் பேரிடியாக உள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கும் அதேநேரம், அரசின் நிதி சூழலை கருத்தில் கொண்டு தொகுப்பூதிய முறையில் பணியாற்ற தயாராக உள்ள தங்களை காலி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களாக பணி நிரவல் செய்ய வேண்டும்.
மேலும் காலிப்பணியிடங்களை முழுவதுமாக நிரப்பக்கோரி ஆகஸ்ட் மாதம் முதல் அறவழியில் தங்களது போராட்டம் நடத்த உள்ளோம். எங்களுடைய அனைத்து தகுதிகளையும் நிரூபித்து 13 ஆண்டுகளாக காத்திருக்கும் எங்களில் பலர் ஆசிரியர் பணி கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு சித்தாள், கொத்தனார் என பல்வேறு கூலித் தொழிலுக்கும் செல்லும் நிலை உள்ளது. மேலும் டாஸ்மாக் பார்களிலும் வேலைக்கு செல்லும் தங்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு விரைந்து வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
Comments are closed.