பாசிசத்திற்கு எதிராக போராடாமல் நடிகர் விஜய் கள்ள மவுனம் காப்பது, பாஜகவுடன் அவர் கள்ள உறவில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது – விசிக துணை பொது செயலாளர் வன்னி அரசு பேட்டி!
மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக துணை பொது செயலாளர் வன்னி அரசு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,…
பொருளாதார ரீதியாக இஸ்லாமியர்களை பலவீனப்படுத்தும் நோக்கில் வக்பு வாரிய திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களுக்கு வக்பு சொத்துக்கள் உள்ளது இதனை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாரதிய ஜனதா அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவிற்கு ஏற்படுத்தப்பட்ட குழுவில் இஸ்லாமியர் அல்லாதவர்களை இணைத்து இருப்பது மற்றும் மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பார் எனக் கூறுவது ஏற்புடையதல்ல. ஸ்ரீரங்கம், ராமர் கோவில் , சங்கர மடம் போன்றவற்றில் இஸ்லாமியர்களை அவர்கள் போடுவார்களா? என கேள்வி எழுப்பினார். இச்சட்ட திருத்தத்தை உடனே திரும்பப்பெற வேண்டும் என விசிக சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.
இன்றைக்கு பாசிசமா பாயாசமா என கேட்டு இருக்கின்ற தவெக தலைவர் விஜய் இந்த பாசிசத்தை கண்டிக்காமல், இந்த பாசிசத்துக்கு எதிராக போராடாமல் கள்ள மவுனம் காப்பது பாஜகவுடன் அவர் கள்ள உறவில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நாம் தமிழர் கட்சியின் சீமானும் பாரதிய ஜனதா கட்சியின் கிளை அமைப்பாக தமிழகத்தில் செயல்பட்டு இன்றைக்கு முழுக்க முழுக்க சங்பரிவார் அமைப்பின் கிளை அமைப்பாக செயல்படுகிறார்.
தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாத வரை இந்தியை திணிக்க மாட்டோம் என உறுதிமொழி கொடுத்தது நேருவும், இந்திராகாந்தியும் தான். அதை யார் கொடுக்க வைத்தது, இன்று வரை அது நடப்பில் உள்ளது என்றால் இங்கு திராவிட இயக்கங்கள் போராடியது தான் அதற்கு காரணம்.
எந்த ஒரு வரலாற்று பின்னணியும் தெரியாமல், பாஜக எழுதிக் கொடுத்த அறிக்கையை அப்படியே படித்திருக்கிறார் விஜய். இது அவருக்கு நல்லதல்ல. அவர் நம்பகத்தன்மையை இழக்கிறார். சிறுபான்மை மக்களுக்கு எதிராக அவர் தொடர்ச்சியாக பீஸ்ட் , துப்பாக்கி போன்ற படங்களில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டினார். விஜய் இது குறித்து பேசுவது அபத்தமானது.
2021 தேர்தலிலேயே திமுக ஆட்சிக்கு வருவதற்கு விடுதலை சிறுத்தைகளின் பங்களிப்பு, இடதுசாரிகளின் பங்களிப்பு அதிகமாக இருந்திருக்கிறது. 2026 தேர்தலுக்கு கூடுதலாக எங்களுடைய வலிமையை நிறுவிக் கொண்டிருக்கின்றோம். தமிழகத்தில் திமுக அதிமுகவிற்கு அடுத்தபடியாக ஒரு வலிமையுள்ள, வாக்கு வங்கி உள்ள கட்சி விடுதலை சிறுத்தைகள் என்பதை திமுகவும் அதிமுகவும் ஒப்புக்கொள்ளும்.
தேசியக் கல்விக் கொள்கையில் மூன்று மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என உள்ளது. வட மாநிலங்களில் மூன்று மொழி கற்றுக் கொள்கிறார்களா என்றால் இல்லை. நாடாளுமன்றத்தில் அதிகமாக சமஸ்கிருத மொழிக்கு தான் நிதி ஒதுக்கி உள்ளனர். இந்தியாவில் மொத்தம் 22 அலுவல் மொழி உள்ளது என்றால் அனைத்து மொழிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்க வேண்டும். இந்தி பொது மொழி அல்ல என்றார்.
Comments are closed.