திருச்சி நவல்பட்டில் ₹.59.57 கோடி மதிப்பில் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக, 732 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 502 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை திறந்து வைப்பதோடு, அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக 30 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினார். இதில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம், நவல்பட்டில் ரூபாய் 59.57 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.




அதனைத் தொடர்ந்து திருச்சி நவல்பட்டு புதிய தகவல் தொழில்நுட்ப கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வளாகத்தை பார்வையிட்டார். இந்நிகழ்வில் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் (கட்டிடங்கள்) வள்ளுவன், எல்காட் துணை மேலாளர் புவனேஸ்வரி, மெப்ஸ் (MEPZ) நிறுவனத்தின் அலுவலர் பாலமுருகன், நவல்பட்டு ஊராட்சி மன்றத்தலைவர் ஜேம்ஸ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.




