ஒன்றரை ஆண்டுகளில் 10 கல்லீரல் மாற்று சிகிச்சைகளை செய்து திருச்சி அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை!
நமது உடலில் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் தான், உடலில் உள்ள நச்சு பொருள்களை அகற்றுவது, செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாப்பது என மிக முக்கியமான பணிகளை செய்யும் உறுப்பாக கல்லீரல் உள்ளது. ஆனால் சமீபகாலமாக கல்லீரல் நோய்கள் அதிகரித்து வருவது உடனடி கவனம் மற்றும் சிகிச்சைக்கான அவசியத்தை வலியுறுத்துவதாக உள்ளது.
இந்நிலையில் திருச்சி அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஒன்றரை ஆண்டுகளில் 10 கல்லீரல் மாற்று சிகிச்சைகளை செய்து சாதனை படைத்துள்ளனர். மேலும் கணையம், பித்தநாளம், போர்டல் நாள நோயாளிகளும் நலம் பெற்றுள்ளனர். சிக்கலான சிகிச்சைகளிலும் சிறப்பான தீர்வுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
இதில் திருச்சி அப்போலோ மருத்துவமனையின் கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் குமரகுருபரன் பேசுகையில்…
கல்லீரல் நோய் பாதிப்புகளை தீவிர பாதிப்பு, நாள்பட்ட பாதிப்பு என இரண்டு முக்கிய வகைகளாக பிரிக்கலாம். இதில் தீவிர கல்லீரல் பாதிப்புகள் திடீரென ஏற்படக் கூடியவை. அதேவேளையில் நாள்பட்ட பாதிப்புகள், உடல்பருமன், மதுப்பழக்கம், வைரஸ் தொற்றுக்களால் ஏற்படக் கூடியவை. இவை ஏற்படுவதற்கு சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட பிடிக்கலாம். நாள்பட்ட கல்லீரல் பாதிப்புகள் வெளிப்பட காலம் பிடித்தாலும், பாதிப்பு ஏற்பட்ட பின்பு அவற்றின் தாக்கம் வெளிப்படையாகவும், அன்றாட வாழ்க்கையை பாதிக்க கூடியதாகவும் அமைகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உடல் சோர்வு, கண்களில் மஞ்சள் பூத்திருப்பது, சரும அரிப்பு, கால்கள் மற்றும் அடிவயிற்றில் வீக்கம், காரணமில்லாமல் எடை குறைதல், எளிதில் காயமடைவது, சிறுநீர் கருப்பாக செல்வது, மலம் வெளிறிய நிறத்தில் இருத்தல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும். இரத்தத்தில் நச்சுப் பொருள்களை அகற்றுவதில் கல்லீரலுக்கு சிரமம் ஏற்படுவதால் இந்த அறிகுறிகள் தென்படுகின்றன. இத்தகைய பாதிப்புகள் கல்லீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்பையும், செயல்பட முடியாத நிலையையும் வெளிப்படுத்துபவை என்பதால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம் என்றார்.
தொடர்ந்து அப்போலோ மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தமிழ்நாடு தலைவர் இளங்குமரன் பேசுகையில்…..
கல்லீரல் நோய் பாதிப்பின் இறுதி நிலையில் உள்ளவர்களுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. உறுப்பு தானம் செய்வோரைப் பொருத்து இரண்டு வகைகளில் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. உயிரிழந்வரின் உறுப்பு (கடாவரிக்) அல்லது உயிருடன் இருப்பவரிடம் இருந்து பெறப்படுவது என இரண்டு வகைகளில் கல்லீரல் பெறப்படுகிறது. மாற்று சிகிச்சைக்கு எந்த அளவுக்கு உடனடி தேவை உள்ளது, தானம் அளிப்பவர் தயாராக உள்ளாரா? மற்றும் நோயாளியின் இதர சூழல்கள் ஆகியவற்றைப் பொருத்து எந்த சிகிச்சை முறையை பின்பற்றுவது என தேர்வு செய்யலாம் என்றார்.
தொடர்ந்து அப்போலோ மருத்துவமனையின் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் விஜய் கணேசன் பேசுகையில்….
கல்லீரல், கணைய, பித்தநாள விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒன்றரை வருடத்திற்கு முன்பு துவங்கப்பட்டது. தற்போது வரை 2 குழந்தைகள் உள்பட 10 பேருக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டு அவர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர் என தெரிவித்தார்.
நிகழ்வின் தொடக்கத்தில் திருச்சி அப்போலோ மருத்துவமனை கூடுதல் துணை தலைவர், பிரிவு தலைவர் ஜெயராமன் அனைவரையும் வரவேற்றார். இறுதியாக மருத்துவ நிர்வாக அதிகாரி சிவம் நன்றி தெரிவித்தார்.