ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு – “ரங்கா” “ரங்கா” கோஷம் முழங்க திரளான பக்தர்கள் தரிசனம்!

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், உலகப் பிரசித்திபெற்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த மாதம் 30 ஆம் தேதி மாலை, திருநெடுந்தாண்டகம் வைபவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பகல்பத்து உற்சவம் டிச.31 ஆம் தேதி துவங்கியது. தினந்தோறும் பல்வேறு வகையான சிறப்பு அலங்காரங்களில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான பரம்பதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 5.15 மணிக்கு நடந்தது. உற்சவர் நம்பெருமாள் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, ஆண்டாள் கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து அதிகாலை, 4.15 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து தனுர் லக்கினத்தில் புறப்பாடு கண்டருளினார். அதனைத்தொடர்ந்து காலை 5.15 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

- Advertisement -

அப்போது, நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ, “ரங்கா.. ரங்கா.. கோவிந்தா.. கோவிந்தா..” கோஷம் விண்ணதிர, பரமபதவாசலை கடந்து வெளியே வந்தார். மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு காலை 5.45 மணிக்கு வந்தடைந்தார். அங்கு நம்பெருமாள் சுமார் 1 மணிநேரம் பக்தர்களுக்கு சேவை வழங்கினார். அதன்பின் காலை 6.45 மணிக்கு சாதரா மரியாதையாகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் காலை 8 மணிக்கு எழுந்தருளுவார். காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணிவரை பொதுஜனசேவை நடைபெறும். பின்னர் திருமாமணி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் நள்ளிரவு, 12 மணியளவில் புறப்பட்டு நாளை (சனிக்கிழமை) அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைவார்.

கடந்தாண்டு வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பின் போது சுமார், 2 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்தனர். நடப்பாண்டு சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தில், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து சுமார் 2½ லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்காரணமாக, பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கோயில் அதிகாரிகளும், மாநகர போலீசாரும், மாவட்ட நிர்வாகத்தினரும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து செய்துள்ளனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்