திமுக கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், அதில் எந்த மாற்றமும் கிடையாது – திருச்சியில் துரை வைகோ பேட்டி!
திருச்சி எம்பி துரை வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,
திருச்சி மாவட்டம் சஞ்சீவி நகர் பகுதியில் ரயில்வே சுரங்க பாதை அமைக்க மக்கள் கோரிக்கை வைத்தனர். ரயில்வே துறை அதிகாரிகளிடம் பேசி அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருவெறும்பூர் அருகே உள்ள மஞ்சத்திடல் அருகே ரயில்வே மேம்பால பணிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் அந்த பணிகள் தொடங்கும்.
வந்தே பாரத் ரயிலை பராமரிக்கும் பணிமனையை திருச்சியில் தொடங்க கோரிக்கை வைத்துள்ளோம். மீண்டும் டெல்லி செல்லும் போது ரயில்வே அமைச்சரிடம் இது குறித்து பேசுவேன். வந்தே பாரத் பணிமனை திருச்சியில் அமைக்கப்பட்டால் வேலை வாய்ப்பு பெருகும், வந்தே பாரத் ரயிலும் திருச்சியை மையப்படுத்தி இயக்க அதிக வாய்ப்பு உள்ளது. அந்த பணிமனையை திருச்சியில் தொடங்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்வோம்.
திருச்சி மெயின் கார்ட் கேட் – சாலை ரோட்டை இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. ஜூன் 2026 ல் அந்தப் பணி நிறைவு பெற்று, பயன்பாட்டிற்கு வரும் என ரயில்வே மற்றும் நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர். அந்தப் பணி ரயில்வே நிர்வாகத்தால் தான் கால தாமதம் ஏற்பட்டது.
திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். திமுக கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் அதில் எந்த மாற்றமும் கிடையாது என்றார்.
Comments are closed.