டிசம்பர் 10 ஆம் தேதி மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் பகுதி சபா கூட்டங்கள் நடத்தி, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில் திருச்சி மாநகராட்சியின் 65 வார்டுகளிலும், அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலைமையில் இன்று பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
இதில் மண்டலம் 5 க்கு உட்பட்ட 27 வது வார்டு சங்கீதாபுரம் ஆரோக்கிய அன்னை ஆலயம் பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்துக்கு மேயர் அன்பழகன் தலைமை வகித்து , பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இக்கூட்டத்தில் சங்கீதபுரம், ஆட்டுமந்தை தெரு, சவேரியார் கோவில் தெரு, மீன்கார தெரு, மல்லிகைபுரம், ஜெனரல் பஜார், வண்ணாரப்பேட்டை பெருமாள் கோவில் தெரு, பென்சனர் தெரு, விஷப்பன் நாயக்கன் பேட்டை, ரெங்கநாதபுரம் தெரு, மூலைக் கொல்லை, தென்னூர், பட்டாபிராமன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர். பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார். முன்னதாக மேயர் அன்பழகன் 27 வது வார்டு பகுதிகளுக்கு முடிவுற்ற திட்ட பணிகளையும், நலத்திட்டங்களையும் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்ட பணிகளையும் பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.
இதேபோல 22 வது வார்டுக்ககான பகுதி சபா கூட்டம், வார்டு கவுன்சிலரும் மண்டலம் 5-ன் தலைவருமான விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் தில்லை நகர் மக்கள் மன்றத்தில் நடைபெற்றது. செயற்பொறியாளர் இப்ராஹிம் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல குழுத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் உறுதியளித்தார்.
Comments are closed.