தமிழகத்தில் வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை – காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திருச்சியில் பேட்டி!
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள உப்புச் சத்தியாக்கிரக நினைவிடத்தில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை மரியாதை செலுத்தினார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்…
பிரிட்டிஷ் அரசாங்கம் உப்புக்கு வரி விதித்ததை கண்டித்து, 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி உப்பு சத்தியாக்கிரக யாத்திரை மேற்கொண்டார். தமிழகத்தில் ராஜாஜி தலைமையில், வேதாரண்யம் வரை யாத்திரை நடந்தது. உப்புக்கு வரி விதித்ததை கண்டித்து நாடு முழுவதும் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த நாளில், சுதந்திர போராட்டத்தின் துவக்கமாக மிகப் பெரிய எழுச்சி ஏற்பட்டது. இந்த வரலாறு பா.ஜ.க கட்சியினருக்கும், மோடிக்கும், அண்ணாமலைக்கும் தெரியுமா?. ஜெனரல் டயர் நேரடியாக போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ளினார். இன்று மறைமுகமாக அணுஅணுவாக இந்தியாவின் சிறுபான்மை மக்களையும், விளிம்பு நிலை மக்களையும் சுட்டுக் கொன்று வருகின்றனர். பெண்களுக்கு குழந்தைகளுக்க பாதுகாப்பு இல்லை.
இந்தியாவில் சிறுபான்மை மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். விளிம்பு நிலை மக்கள் தாக்கப்படுகின்றனர். இது தான் பா.ஜ.க ஆட்சியின் 10 ஆண்டு கால லட்சணம். இந்த நாட்டுக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை மோடியும், அண்ணாமலையும் தமிழகத்துக்கு வரும் போது பேச வேண்டும்.
வட மாநிலங்களில் செய்து முடித்து விட்டு, தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் வெறுப்பு அரசியலை செய்து கொண்டிருக்கிறது. பிரித்தாலும் சூழ்ச்சியும் செய்ய முயற்சிக்கின்றனர். இதை ஒரு போதும் தமிழக மக்கள் ஏற்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழக மண்ணில் வெறுப்பு அரசியலுக்கு இடம் இல்லை. பிரிவினைவாதத்துக்கு இடம் இல்லை. சாதி மதம் பற்றி பேசி, துண்டாடும் பா.ஜ.க கட்சிக்கும் இடம் இல்லை. மோடியும், அண்ணாமலையும் திருச்சிக்கு வந்து, உப்புச் சத்தியாக்கிரகம் நடத்திய ராஜன் இல்லத்தில், சுதந்திரத்துக்கு போராடியவர்கள் பற்றியும், சுதந்திர வரலாற்றை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். தேசத்தை துண்டாடும் ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்தையும் பா.ஜ.க கட்சியின் வெறுப்பு அரசியலையும், தமிழக மக்கமள் தொடர்ந்து புறந்தள்ளி வருகின்றனர். இந்த தேர்தலிலும் புறந்தள்ளுவார்கள்
தேர்தல் முடிந்த பின், திருச்சியில் பராமரிப்பின்றி கிடக்கும் உப்புச் சத்தியாக் கிரக யாத்திரை நினைவிடத்தை செப்பனிடுவோம். அரசு இடம் கொடுக்காவிட்டால், காங்கிரஸ் சொந்த செலவில் பராமரிக்கும். ராகுல் பிரசாரத்துக்கு செல்லும் இடம் எல்லாம் எழுச்சி ஏற்படுகிறது.
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். வெறுப்பு அரசியல், மத அரசியல், சாதி அரசியல், இன, மொழி அரசியல் அனைத்தையும் பா.ஜ.க செய்து பார்த்தது. இந்த அரசியலுக்கு எல்லாம், இந்திய மக்கள் ஒரு போதும் இடம் தர மாட்டார்கள். இந்திய நாட்டை பின்னடைவுக்கு கொண்டு சென்றவர் மோடி. பின்னுக்கு கொண்டு சென்ற இயக்கம் பா.ஜ.க. பா.ஜ.க கட்சியினர் மிகப் பெரிய தோல்வியடைப் போகின்றனர். வாஜ்பாய் போன்ற பெரும் தலைவர்களுக்கே பா.ஜ.க அரசியலில் தேர்தல் களத்தில் இடம் கொடுக்கவில்லை.
பெங்களூரு உணவகத்தில் குண்டு வெடிப்புக்கு தமிழர்கள் காரணம் என்று அந்த மாநில எம்.பி கூறிய போது, அதை கண்டிக்காமல், தமிழ் இனத்துக்கு துரோகம் செய்பவர் அண்ணாமலை. சமூக விரோதிகளை தான் மோசடி செய்தவர்களை தான் வேட்பாளர்களாகவும், தலைவர்களாகவும் நியமித்துள்ளனர்.
பா.ஜ.க கட்சியின், மோடி மாடல் ஆட்சியில் அராஜகத்தின் உச்சத்தில் இருப்பதால், இதற்கு முடிவு வந்து விட்டது. உச்ச நீதிமன்றம் அனுமதி இல்லாமல், கர்நாடகாவில் காவிரியில், எந்த ஒரு அணை கட்ட முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.