சீமானுக்கு எதிராக திருச்சி சரக டி.ஐ.ஜி தாக்கல் செய்த அவதூறு வழக்கு விசாரணை மே.8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர். இந்த நிலையில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4 இல் டி.ஐ.ஜி வருண் குமார் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் இன்று நீதிபதி விஜயா முன்னிலையில் நேரில் ஆஜரானார். சீமான் தரப்பில் அவரின் வழக்கறிஞர்கள் ஆஜராகி எழுத்துப்பூர்வமான வாதங்களை முன் வைத்தனர். அந்த வாதத்தின் நகல்களை வருண் குமார் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா மீண்டும் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து டி.ஐ.ஜி வருண் குமார் தரப்பு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,..
வழக்கு விசாரணை வரும் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சீமான் அவரின் தரப்பு விளக்கங்களை அளிக்க வேண்டும். கடந்த 8 ஆம் தேதி டி.ஐ.ஜி வருண் குமார் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த போது சீமான் தரப்பு ஆதராவளர்கள் வருண் குமார் முன்னிலையில் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள். இதனால் வருண் குமார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். எனவே இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றார்.
Comments are closed.