தமிழ்நாட்டின் மையப்புள்ளியாக விளங்கும் திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் ஆகிய 2 முக்கிய பேருந்து நிலையங்கள் உள்ளது. நகரின் மையப்பகுதிகளில் உள்ள இரு பேருந்து நிலையங்களிலும் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும். மேலும் திருச்சி மாநகர் பகுதியில் அதிகரிக்கும் மக்கள்தொகை பெருக்கம், அதிக அளவில் வாகன பயன்பாடுகள் காரணமாகவும், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், நகர்ப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்க்கு முடிவு கட்டும் வகையில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே பஞ்சப்பூரில் சுமார் ரூ.350 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பேருந்து முனையமானது நாள்தோறும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் அளவிற்கு மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இதில் பொது மக்களுக்கு தேவையான காத்திருப்பு அறை, குடிநீர் வசதி, கழிவறை வசதி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகள், மாற்று திறனாளிகளுக்கான பிரத்யேக தடங்கள், ஓய்வறைகள், குளிரூட்டபட்ட தங்கும் அறைகள், ஆம்னி பேருந்துக்கான தனி வழித்தடம் என பிரமாண்டமாக தயாராகி வருகிறது. மேலும் இந்த பேருந்து முனையத்திற்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் வந்து செல்லும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு கட்டுமான பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு பேசியது..
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் பணிகளை குறித்து அதிகாரியிடம் ஆலோசனை மேற்கொண்டோம். குறிப்பாக போக்குவரத்து துறை அதிகாரியிடம் பேருந்துகள் இயக்குவது குறித்தும் நேரத்தை மாற்றம் செய்வது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுவது குறித்தும் சுகாதாரத்துறை தீயணைப்பு துறை கட்டுமானத்துறை மீட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் பணிகளை விரைந்து முடிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த பேருந்து நிலையம் கடந்த பிப்ரவரி மாதமே திறப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது ஆனால் சில காரணங்களால் திறப்பு விழா தள்ளி போனது. ஆகையால் மார்ச் மாதம் பணிகளை முழுமையாக முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பதற்கான அனைத்து விதமான ஆலோசனைகளையும் தெளிவாக ஆலோசிக்கப்பட்டது என தெரிவித்தார்.
Comments are closed.