திருச்சி கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தில் தீபாவளி முதல் விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு!
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், இந்த ஆண்டிற்கான தீபாவளி முதல் விற்பனையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கோ.ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் நாகராஜன், மேலாளர் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி கோபி, திருச்சி பொதிகை கோ.ஆப்டெக்ஸ் விற்றனை நிலைய மேலாளர் சங்கர் மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 90 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது.

திருச்சி பொதிகை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கும் 30%சிறப்புத்தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த சிறப்புத்தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் உள்ளிட்ட ஏராளமான இரகங்கள் விற்பனைக்கு உள்ளன.
திருச்சி பொதிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024ல் ரூ.202.11 இலட்சங்கள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2025 க்கு ரூ.275 இலட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம். “கோ-ஆப்டெக்ஸ் மாதந்திர சேமிப்புத்திட்டம்” என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11-மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12-வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30% அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது.





Comments are closed.