சர்வதேச அறிவியல் தினம் – திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் தின விழாவில் 1000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு!
திருச்சி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைதியும், வளர்ச்சியும் என்ற கருத்தில் உலக அறிவியல் தினத்தை பள்ளி மாணவர்களுக்கான திருவிழாவாக 22 மற்றும் 23 ஆகிய இரு தினங்கள் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி மாணவ மாணவியருக்கான பல்வேறு திறன்சார் போட்டிகள், புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான போட்டிகள், அறிவியல் மாதிரிகள் தயார் செய்யும் போட்டிகள், வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 45 பள்ளிகளில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் முதல் நாளன்று நேற்று பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் எம்.செல்வம் தலைமையேற்று தலைமை உரையாற்றினார். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர் பத்மஸ்ரீ டாக்டர் ஆர்.வாசுதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில், அறிவியல் வாழ்க்கையோடு இணைந்து இருப்பதை எடுத்துக் கூறி மாணவர்கள் தங்களின் அறிவியல் அறிவை மேம்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கான அனைத்து துறைகளிலும் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க முன்வர வேண்டும் என்றார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் மா.பிச்சைமணி அனைவரையும் வரவேற்று கல்லூரியின் சிறப்பு இயல்புகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் தனித்தன்மைகள் குறித்தும் எடுத்துக் கூறினார். கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் ஆர்.வெங்கடேஷ், போட்டிகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளை வாழ்த்தி மாணவர்களிடையே ஆக்கபூர்வமான அறிவியல் சிந்தனைகள் மேம்பட வேண்டும் என்றும் எதிர்கால தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாணவர்கள் படைப்புத்திறன் கொண்டவர்களாக தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பங்கேற்றனர்.
Comments are closed.