விஜய்க்கு அரசியல் சொல்லித் தர சென்றிருக்கிறாரா செங்கோட்டையன்?-அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை விமர்சனம்
விஜய்க்கு அரசியல் சொல்லித் தர சென்றிருக்கிறாரா செங்கோட்டையன்?-அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை விமர்சனம்
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் த.வெ.க. அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் இன்று செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார் மற்றும் அவருடன் அவரது ஆதரவாளர்களும் த.வெ.கவில் இணைந்தனர்.த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையனுக்கு நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு தரப்பட்டது. ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் 4 மாவட்டங்களுக்கு மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாவது:
பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. கட்சியை விட்டு வெளியேறுவதற்கு அவருக்கு ஒரு காரணம் தேவைப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே செங்கோட்டையன் இது போன்ற முயற்சியை எடுத்தவர்தான்.தாயை பழித்தவனும், தலைமையை மதிக்காதவனும் ஒன்றே. எங்கள் பொதுச்செயலாளரை பொறுத்தவரை இந்த விஷயத்தில் அவசரப்படவில்லை. மிகவும் பொறுமை காத்தார். செங்கோட்டையனின் இந்த நடவடிக்கையால் அதிமுகவில் எந்த பாதிப்பும் ஏற்படாது.பழுத்த இலை விழுவதால் மரத்திற்கு எந்த சேதமும் இல்லை.தலைமைக்கே சவால் விடும் செங்கோட்டையன் போன்ற நபர்கள் இருக்கும் வரை கட்சியில் குழப்பம்தான் நீடிக்கும்.50 ஆண்டுகால அரசியல் அனுபவம் மிக்க இவர், விஜய்க்கு அரசியல் சொல்லித் தர சென்றிருக்கிறாரா என்று தெரியவில்லை. காரணம், நதிகள் கடலில் கலப்பது இயற்கை. கடல்நீர் நதியில் சென்று கலப்பது காலம் செய்த பாவம். இவரது நடவடிக்கை தற்கொலைக்கு சமம் என்றுதான் நான் கருதுகிறேன். ஒருவன் தற்கொலை செய்ய முடிவு செய்துவிட்டால் அவனை என்ன காவல் காத்தாலும் காப்பாற்ற முடியாது.வளர்ந்த கட்சியில் அனுபவித்துவிட்டு, இன்னொரு புதிய கட்சியை நான் வளர்க்கப் போகிறேன் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் இளவயதுக் காரர்கள். கிட்டத்தட்ட வாக்குரிமை இல்லாதவர்கள்தான் அதில் அதிகமாக இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களோடு வயது முதிர்ந்த மூத்த அரசியல்வாதி ஒன்றிணையவே முடியாது.எங்களுடன் அவர் இணைந்து பயணித்த அரசியல் வேறு, அங்கு போய் சிறுவயதுக்காரர்களோடு இணைந்து பழகி புதிதாக கட்சியை வளர்த்து, ஊர் ஊராக சென்று கொடியேற்றி ஆட்சியை பிடிப்பேன் என்பதெல்லாம் கற்பனைக்கு எட்டாத விஷயம். செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கை முடிந்து போன ஒன்றாகி விட்டது.
இவ்வாறு செம்மலை தெரிவித்தார்.


Comments are closed.