2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்.15 வரை நீட்டிப்பு – வருமான வரி முதன்மை ஆணையர் தகவல்!
2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்.15 வரை நீட்டிப்பு – வருமான வரி முதன்மை ஆணையர் தகவல்!

திருச்சி வருமான வரித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருமான வரி செலுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஆட்சியர் சரவணன் தலைமை வகித்தார். இதில் மதுரை மண்டல வருமான வரி முதன்மை ஆணையர் வசந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினார். அதில், நாட்டின் நிகர நேரடி வரி வசூல் 2024-25 நிதியாண்டில் ₹.22.26 லட்சம் கோடியை எட்டியுள்ளது. மொத்த வரி வசூலில் 6 % பங்கு வகிக்கும் தமிழகம், நாட்டில் வருமான வரி வசூலில் 4-வது இடத்தை பெற்றுள்ளது.

2022-23 நிதி ஆண்டில் திருச்சி மாவட்டத்தின் மொத்த உள் மாவட்ட உற்பத்தி ₹. 71 ஆயிரத்து 236 கோடியாகவும், தனிநபர் வருமானம் ₹. 2 லட்சத்து 34 ஆயிரத்து 430 ஆகவும் உள்ளது.
2024-25 நிதியாண்டில் மாநில தனிநபர் வருமானம் ₹.1 லட்சத்து 96 ஆயிரத்து 301 ஆகவும், தேசிய தனிநபர் வருமானம் ₹.1 லட்சத்து 14 ஆயிரத்து 710 ஆகவும் உள்ள நிலையில், திருச்சியின் தனிநபர் வருமானம் ஒட்டுமொத்த தமிழகம் மற்றும் இந்தியாவை விட அதிகமாகும். ஆனால் மதுரை மண்டலம் வரி வருவாய் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி உள்ளது. எனவே இந்த மண்டலத்தில் வருமான வரி செலுத்துவோருக்கு இடையே முறையாக வரி செலுத்தும் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டியது அவசியமாகும். இதற்காக தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
புதிய வருமானவரி சட்டம்-2025 வரும் 2026-27 நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் மூலம் விதிகள், கடினமான மொழி எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. பெரிய அளவிலான கொள்கை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையில் இருந்து ஏதேனும் நோட்டீஸ் வந்தால் அதற்குரிய பதில் விளக்கம் உடனே தெரிவிக்க வேண்டும். தவறுதலாக ரீஃபண்ட் கோரிக்கை செய்திருந்தால், அதை வாபஸ் வாங்க மேம்படுத்தப்பட்ட அறிக்கை தாக்கல் செய்யலாம். இதற்கான காலவரம்பு 4 ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வருமான வரித்துறை துணை ஆணையர் கார்த்திக், கூடுதல் ஆணையர் நித்யா மற்றும் அதிகாரி கணேஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
இணை ஆசிரியர்
மு. சுபைருதீன்
திருச்சி





Comments are closed.