தேர்தல் கூட்டணி குறித்து அடுத்த மாதம் அறிவிக்கப்படும்- ராமதாஸ்
தேர்தல் கூட்டணி குறித்து அடுத்த மாதம் அறிவிக்கப்படும்- ராமதாஸ்
தைலாபுரம் தோட்டத்தில் கடந்த 15-ந் தேதி ராமதாஸ் தலைமையில் வழக்கறிஞர் சமூக நீதி பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் மஹாலில் கடந்த 18-ந் தேதி பா.ம.க. வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டமும் மறுநாள் (19-ந் தேதி) இளைஞர் சங்க மாநில, மாவட்ட , நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கனமழை காரணமாக திண்டிவனத்தில் நடைபெற இருந்த பா.ம.க. வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டமும், இளைஞர் சங்க மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த கூட்டம் இன்று (நவம்பர் 25) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் தீரன், பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர், அருள் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர், அன்பழகன், மாநில நிர்வாகிகள், கட்சி அமைப்பு ரீதியாக உள்ள 108 மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அடுத்த மாதம் அறிவிக்கப்படும். அடுத்த மாதம் சேலம் ஆத்தூரில் உள்ள தலைவாசலில் நடைபெற உள்ள கூட்டத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்காத தமிழக அரசை கண்டித்து டிசம்பர் 12-ந்தேதி மாநில முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Comments are closed.