பாஜகவின் கீழ்மையான போக்கு- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.
பாஜகவின் கீழ்மையான போக்கு- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.
சென்னையை தொடர்ந்து அடுத்த நிலையில் உள்ள இரண்டாம் கட்ட நகரங்களான கோவை மற்றும் மதுரைக்கும் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த தமிழக அரசு திட்டம் தீட்டியது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரித்து தமிழக அரசிடம் வழங்கியது.

இந்நிலையில், 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியும் எனக் கூறி மதுரை மற்றும் கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான தமிழகத்தின் முன்மொழிவுகளை மத்திய அரசு, நிராகரித்துள்ளது.இருப்பினும், குருகிராம், புவனேஷ்வர், ஆக்ரா, மீரட் உள்ளிட்ட நகரங்ளின் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருந்தபோதும் அங்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.
இதனிடையே, பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய, இரண்டாம் நிலை மாநகரங்களுக்கு கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதலை வழங்கிய மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணிப்பது அழகல்ல என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
‘கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் “NO METRO” என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம். அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்.” என தெரிவித்துள்ளார்.


Comments are closed.