திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் கடந்த தேர்தலின் போது அதிமுக மூன்று வார்டுகளில் வெற்றி பெற்றது. கடந்த இரண்டரை வருடங்களாக, அதிமுக கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதி மக்களுக்கான குறைகளை மாமன்றத்தில் எடுத்துக் கூறினாலும், மக்கள் நலப் பணிகள் புறக்கணிக்கப்படுவதாக அதிமுக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாநகராட்சி 14 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் வார்டுக்கு உட்பட்ட பாபு ரோடு, இ.பி ரோடு, திப்பிரான் தொட்டி தெரு, சின்ன கம்மாள தெரு, அல்லிமால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாக பாதாள சாக்கடை பணிகள் கிடப்பில் போடப்பட்டதன் காரணமாக, சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் இந்த சாலைகளை கடந்து செல்ல மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பள்ளிவாசல், ஆலயங்கள் உள்ள இந்த பகுதியில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் கண்டுகொள்ளாத நிலை உள்ளது.
இது குறித்து கவுன்சிலர் அரவிந்தன் தங்களது பகுதி மக்கள் கோரிக்கை குறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டு கவுன்சிலர் அரவிந்தன் அதிமுகவை சேர்ந்தவராக இருப்பதால், திருச்சி மாநகராட்சி மேயர், அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த வார்டை புறக்கணிப்பதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் திமுக ஆட்சி பொறுப்பேற்று, அதிமுகவை சேர்ந்த வார்டு கவுன்சிலர்களுக்கான மக்கள் நல பணித்திட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளை கண்டித்து, 14 வது வார்டு அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில், வார்டு பொதுமக்கள், திருச்சி பாபு ரோடு பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த, திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் வருகின்ற 18 ஆம் தேதி சாலை அமைக்கும் பணி நடைபெறும் என வாக்குறுதி அளித்ததனர். இதன்பேரில் தற்காலிகமாக இந்த போராட்டமானது கைவிடப்பட்டது. அதிகாரிகள் வாக்களித்தபடி சாலை அமைக்கும் பணி நடைபெறாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
Comments are closed.