காந்திமார்க்கெட் இடம் மாறுவது குறித்து பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் – அதிமுக வேட்பாளர் கருப்பையா வாக்குறுதி!
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தனது தொகுதிக்குட்பட்ட பாலக்கரை, தென்னூர் பள்ளிவாசல்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்சி பாலக்கரை பகுதியில் நானா மூனா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் அதிமுக வேட்பாளர் கருப்பையா வாக்குகள் சேகரித்தார்.





திருச்சி தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட, ஒட்டுமொத்த திருச்சி வாழ் மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்க இந்த தேர்தலில் வாய்ப்பு தாருங்கள் என கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்…
நான் வாக்கு சேகரிக்க செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். நாங்கள் எதிர்பார்த்ததை விட எழுச்சியுடன் ஆரவாரத்துடன் அமோக வரவேற்பு அளிக்கின்றனர். திருச்சி மாநகரத்தின் மையப்பகுதியில் செயல்படும் காந்தி சந்தைதையை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என காந்தி சந்தை வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
எந்தத் திட்டமாக இருந்தாலும் பொதுமக்களுக்கு நன்மை திட்டமாக இருக்க வேண்டும் என்பதில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக உள்ளார். எனவே காந்தி மார்க்கெட் மாற்றம் குறித்து பொதுமக்கள் மற்றும் காந்தி சந்தை வியாபாரிகளிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் இருதரப்பிற்கும் சாதக பாதகம் இன்றி உரிய நடவடிக்கை மேற்கொள்வேன். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள வருகின்றனர்.
ஆனாலும் திருச்சியில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி திருச்சியில் இன்று (சனிக்கிழமை) மீண்டும் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்றார். தொடர்ந்து திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் பள்ளிவாசலிலும் வாக்குகள் சேகரித்தார். இந்நிகழ்வில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




