நடிகர் மனோபாலா காலமானார் – திரையுலகமே சோகத்தில் உள்ளது
நடிகர் மனோபாலா காலமானார் – திரையுலகமே சோகத்தில் உள்ளது
தமிழ் சினிமாவின் இயக்குநரும், நடிகருமான மனோபாலா வயது 69. சென்னையில் (மே 3) இன்று காலமானார்.
1979 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் உதவி இயக்குநராக அறிமுகமான மனோபாலா, புதிய வார்ப்புகள் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், என ஏராளமான படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. வடிவேலு, விவேக், சந்தானம் ஆகியோருடன் அவர் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் வைரலாகியது.
விவேக் உடன் இணைந்து ஒரு படத்தில் அவர் பேசிய காமெடி ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’ என்ற வசனம் டிரேட் மார்க் ஆனது. நடிப்பு மட்டும் இல்லாமல் ஏராளமான படங்களையும் மனோபாலா இயக்கியுள்ளார். ரஜினிகாந்த், மோகன், சத்யராஜ், கார்த்திக் என பல்வேறு முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி இறந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் இரங்கல்: மனோபாலாவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் சமூகவலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று கூறியுள்ளார்.
இயக்குநர் டி.ராஜேந்தர்: “இயக்குநரும் நடிகருமான மனங்கவர் மனோபாலா மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை வருத்தியது. அவரை இழந்து வாடும் அவர்களின் இல்லதாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.”
இயக்குநர் பாரதிராஜா: “என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகிற்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்.”
நடிகர் தம்பி ராமையா: “மனோபாலாவின் இழப்பு மிகப் பெரிய இழப்பு. அடுத்தவரை பார்த்து பொறாமைப்படாதவர் மனோபாலா. உழைக்காமல் அவரால் இருக்க முடியாது. விவேக், மயில்சாமி, மனோபாலா என அடுத்தடுத்த இறப்புகள் கொடுமையானது.”
நடிகர் கவுதம் கார்த்திக்: “மனோபாலா சார் நம்மோடு இல்லை என்ற செய்தி என் இதயத்தை நொறுக்கியது. உங்களோடு பணியாற்றியது உண்மையில் ஒரு மகிழ்ச்சியான ஒரு தருணமாக இருந்தது. நிச்சயமாக உங்களை மிஸ் செய்வோம்.”
நடிகர் சிங்கமுத்து: “மனோபாலா எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடியவர்; வரிசையாக சினிமா பிரபலங்கள் உயிரிழப்பது வருத்தமாக உள்ளது. எல்லோருக்காகவும் முன்நின்றவர் அவர்.”