பள்ளி வளாகத்தில் போதை ஆசாமியின் கார் மோதி சிறுமி பலி: தென்காசியில் உறவினர்கள் சாலை மறியல் – பதற்றம்!
பள்ளி வளாகத்தில் போதை ஆசாமியின் கார் மோதி சிறுமி பலி: தென்காசியில் உறவினர்கள் சாலை மறியல் – பதற்றம்!
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே பள்ளி வளாகத்திற்குள் குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி வந்த நபர் மோதியதில், நான்கு வயது பள்ளிச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் என்ன?
புளியங்குடி நெகட்டும்செவல் பகுதியைச் சேர்ந்த மாரிச்சாமி – வேல்மயில் தம்பதியினரின் மகள் யாழினி (4). இந்தச் சிறுமி புளியங்குடி சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யூகேஜி (UKG) பயின்று வந்தார்.
இன்று பள்ளி நேரத்தில் சிறுமி கழிவறைக்குச் சென்றுவிட்டு வெளியே வந்தபோது, பள்ளி வளாகத்திற்குள் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று எதிர்பாராத விதமாக சிறுமியின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி யாழினி பரிதாபமாக உயிரிழந்தார்.

உறவினர்கள் ஆவேசம் – மருத்துவமனை தாக்குதல்
சிறுமி உயிரிழந்த செய்தியை அறிந்த உறவினர்கள் ஆத்திரமடைந்து, சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் மறியல்
மருத்துவமனை தாக்குதலைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும், உரிய நீதி கோரி உறவினர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இருவர் கைது
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த நபர் மற்றும் அவருடன் இருந்தவர் என இருவரை கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் குடிபோதையில் காரை ஓட்டி வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பள்ளி வளாகத்திற்குள்ளேயே சிறுமி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.





Comments are closed.