சென்னை ஐஐடியில் கடந்த 19ஆம் தேதி
ஒரு மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில். அவருடன் தொடர்பில் இருந்த 10 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 3 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 12 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
இதனிடையே, மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் ஐஐடி வளாகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்ட சுகாதாரத்துறைச் செயலாளர், அங்கு 666 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார். அப்போது மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.