பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும் இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்படும் – பாரிவேந்தர் வாக்குறுதி!
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. பிரச்சாரம் முடிவடைய இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஐ.ஜே.கே வேட்பாளர் பாரிவேந்தர், பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை, துறை மங்கலம், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 21 வார்டுகளில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில்… நான் எம்பியாக கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டப்பணிகளை நிறை வேற்றியுள்ளேன். கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, அதனை பட்டியலிட்டு புத்தகமாக வெளியிட்டுள்ளேன்.
தற்போது நான் மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறேன். இலவச உயர் கல்வி திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 1200 ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி வழங்கப்படும். 1500 குடும்பங்களுக்கு இலவச உயர் மருத்துவ சிகிச்சைக்கான காப்பீடு வழங்கப்படும்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும் போதை மறுவாழ்வு மையங்கள் மற்றும் இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.