திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது…
திருச்சி மாவட்டத்தில் வருகிற 2024 ஆம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடைசி நேர அவசரம் தவிர்க்கும் பொருட்டும், எதிர்வரும் 2024-ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்களை போட்டி நடத்தப்படும் 20 நாட்களுக்கு முன்னதாக மாவட்ட நிர்வாகத்திடம் சமர்பிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு, வடமாடு போடிகளை நடத்தும் விழா குழுவினர் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசாணையில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி போட்டிகளை நடத்த வேண்டும். அரசிடம் முன்அனுமதி பெற்று மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும். அரசாணை வெளியிடப்பட்டு கடந்த ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற கிராமங்களில் மட்டுமே தற்போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும். அரசிடம் இருந்து முன் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி போட்டி நடத்த உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அளித்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.